காங்கயம் அருகே, கான்கிரீட் சாலை அமைப்பதற்குத் தடையாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நால்ரோடு புதூர் பகுதி மக்கள் காங்கயம் வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
காங்கயம் ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சிப் பகுதிக்கு உள்பட்ட நால்ரோடு புதூர் கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சாலை அமையும் இடத்தில் தனி நபர் ஒருவர் வீதியை ஆக்கிரமித்து குடிசை, கழிவறை அமைத்துள்ளார். இதனால், கான்கிரீட் சாலை அமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, கான்கிரீட் சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள அந்த ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்.
மேலும், அந்தக் கழிவறையை ஒட்டிச் செல்லும் பொதுக் குடிநீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து வருவதால், துர்நாற்றம் வீசி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.