வெள்ளக்கோவில் நகராட்சியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, குடிநீர்க் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, நகராட்சி ஆணையர் இ.ஷாஜகானிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
நகராட்சிப் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகிகப்படவில்லை. குடிநீர் வழங்காத காலங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. நகர்மன்றத் தீர்மானம் மூலமாக ஆண்டுக் குடிநீர்க் கட்டணம் ரூ. 780 என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ரூ. 1,560-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பழுதடைந்த குடிநீர் இணைப்புகள் ஒப்பந்ததாரர் மூலமாக சீரமைக்கப்படுவதால் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுக்க நகராட்சி மூலமாகவே பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல, பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரியையும் ரத்து செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.