உடுமலை அருகே மடத்துக்குளத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மடத்துக்குளம் அருகே உள்ள மேற்கு நீலம்பூர் கிராமத்தில் கோயில் திருவிழா நடை பெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பிரச்னையில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் இருவர் காயம் அடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் இந்த புகாரின் மீது போலீஸசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு நீலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மடத்துக்குளம் நால்ரோட்டில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். இதனால் கோவை-திண்டுக்கல் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற மடத்துக்குளம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், விரைவில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். ஆனாலும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.