திருப்பூரில் தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 47 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர், அவிநாசி சாலையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே மாவட்ட தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், தடையில்லாச் சான்று கோரி விண்ணப்பிப்போரிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையிலான அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணி அலுவலகத்திலிருந்து ரூ. 31 ஆயிரம், திருப்பூர் வடக்கு தீயணைப்பு அலுவலர் சக்திவேல் அலுவலகத்திலிருந்து ரூ. 4 ஆயிரம், அலுவலக உதவியாளர் புவனேஷ்வரிடமிருந்து ரூ. 12 ஆயிரம் என மொத்தமாக ரூ. 47 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.