இந்தியாவில் விளையும் எண்ணெய் வித்துக்களுக்கு அரசு மானியம் அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு :
நம் நாட்டின் சமையல் எண்ணெய் மொத்த நுகர்வில் 70 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. மலேசியா, இந்தோனேஷியா நாடுகளில் இருந்து ஒரு கிலோ பாமாயில் 60 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு, அரசு மானியம் ரூ.35 கொடுத்து, ரூ.25 என்கிற விலையில் ரேஷன் கடைகளில் விற்கப்படுகிறது.
ஆனால், உள்நாட்டில் விளைந்து கிடைக்கும் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றுக்கு மானியம் கொடுப்பதில்லை. இவற்றை ரேஷன் கடைகளிலும் விற்பதில்லை.
நடப்பு ஆண்டில் கடலை விளைச்சல் அதிகரித்து, உரிய விலை கிடைக்காமல், 80 கிலோ கொண்ட மூட்டை ரூ.4,800 க்கு மட்டுமே விற்கிறது. இதைப் போலவே மற்ற எண்ணெய் வித்துக்களின் விலையும் கட்டுபடியாகாமல் உள்ளது.
இங்கு கிடைக்கும் எண்ணெய் வகைகளை விட, இறக்குமதி பாமாயில் எந்த விதத்திலும் சிறந்தது கிடையாது. வளர்ந்த நாடுகள் பாமாயிலை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்துவதில்லை.
எனவே, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களுக்கு மானியம் கொடுத்து அரசு ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.