திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ரீபண்ட் பெற ஏழு இலக்க ஏற்றுமதி பொது ஆவண எண் (இ.ஜி.எம்) பெற 60 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் விடுத்துள்ளஅறிக்கை:
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ஜி.எஸ்.டி. வெப்-சைட்டில் 3 விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஏற்றுமதியாளர்களின் விலைப்பட்டியலுடன் ஏற்றுமதி பொது ஆவணம் (இ.ஜி.எம். ஏழு இலக்கம்) எண் பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. ரீபண்ட் பெறுவதற்கு ஏற்றுமதியாளர்கள் ஏழு இலக்க எண் பெற்று விண்ணப்பிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில ஏற்றுமதியாளர்கள் இது வரை விண்ணப்பிக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதனால் ரீபண்ட் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஏற்றுமதியாளர்கள் ஏழு இலக்க எண் பெற கால அவகாசம் கேட்டு கோவை மத்திய ஜி.எஸ்.டி. ஆணையாளர் சீனிவாச ராவிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. இரண்டு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இ.ஜி.எம். எண் பெற்று எளிதாக ரீபண்ட் பெறமுடியும். இந்த அறிவிப்பு, பின்னலாடை துறையினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக ரீபண்ட் கேட்டு விண்ணப்பிக்கவேண்டும். 60 நாள்களுக்குள் இ.ஜி.எம். எண் சமர்ப்பித்து விடுபட்ட தொகையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.