திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு குறித்து செய்தி அறிந்த அதிர்ச்சியில் உயிரிழந்த காங்கயத்தில் உள்ள அக்கட்சியின் தொண்டரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது.
காங்கயம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முருகன் (55). சலவைத் தொழிலாளியான இவர், திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தியை கடந்த ஜூலை 30ஆம் தேதி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
இந்நிலையில், இறந்த முருகனின் குடும்பத்துக்கு நிதியுதவி செய்யும் பொருட்டு, திமுக சார்பில் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை திமுக மாநில இளைஞரணி செயலர் மு.பெ. சாமிநாதன், முருகனின் மனைவி கண்ணம்மாள் மற்றும் அவரது மகன்களிடம் வழங்கினார்.
திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலர் பத்மநாபன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், நகரச் செயலர் ஏசிஜி.மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.