பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றிய ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் தனியார் நூற்பாலை உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அந்த நூற்பாலையில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், வீரக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் நாகராஜ் (42) என்பவர் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். நாகராஜ் தனது மனைவி வெங்கடேஸ்வரி (34), மகன்கள் குணநிதி (15), தயாநிதி (11) ஆகியோருடன் பல்லடம், வடுகபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நூற்பாலை வளாகத்தில் உடலில் ரத்தக் காயத்துடன் நாகராஜ் சடலம் வெள்ளிக்கிழமை காலை கிடந்துள்ளது. இதுகுறித்து வெங்கடேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.