திருப்பூரில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த தொழிலாளி, திருமணம் செய்து வைத்தவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் திருமணி (58). இவர் திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (41) என்பவருக்கு தனது நண்பரின் மகளான மஞ்சுளா என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், ராஜா அடிக்கடி மது அருந்தி வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மஞ்சுளா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் சனிக்கிழமை கொங்கு பிரதான சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் திருமணியை ராஜா சந்தித்துள்ளார். அப்போது தன்னுடன் மனைவி மஞ்சுளாவை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு திருமணி ஆட்சேபம் தெரிவித்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருமணியைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்து, ராஜாவைப் பிடித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.