வெள்ளக்கோவிலில் பசுமை, மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ரேக்ளா கிளப், நிழல்கள் அறக்கட்டளை சார்பில் ஆடி 18 பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு விழா நிகழ்விடத்தில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி செயல்விளக்க அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளக்கோவில் - வள்ளியிரச்சல் சாலையில் நடந்த ரேக்ளா பந்தயத்தை சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து துவக்கி வைத்தனர்.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 154 ரேக்ளா வண்டிகளின் உரிமையாளர்கள் தங்களது காளை மாடுகளுடன் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் 200 மீட்டர், 300 மீட்டருக்கு நடந்த பந்தயத்தில் முதல் மூன்று பரிசுகளாக ஒரு பவுன், அரை பவுன், கால் பவுன் தங்கக் காசுகள் வழங்கப்பட்டன. பந்தயத்தில் பங்கேற்ற அனைத்து ரேக்ளா வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.