நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த மின்மாற்றிகள், மின் கம்பங்களைச் சரி செய்யும் பணிக்கு மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை முறையான ஆவணங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் எனதிருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் செயலாளர் அ.சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த மின்மாற்றிகள், மின் கம்பங்களை சரிசெய்யும் பணிகளுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால் வருகைப் பதிவேடு, பணி பதிவேடு, யார் தலைமையிலான குழுவில் சென்கின்றனர் என்ற முறையான ஆவணங்களுடன் அழைத்தால் தொழிலாளர்கள் பணியாற்றத் தயாராக உள்ளனர்.
ஆனால் சில அதிகாரிகள் எந்தவொரு ஆவணமும் இல்லாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. அதனால் நீலகிரி மாவட்டத்தில் மீட்புப் பணிகளுக்கு அழைத்துச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்களை முறையான ஆவணங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும். தீபாவளிக்கு கருணைத் தொகை வழக்கவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.