காங்கயம் அருகே உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,000 மரக் கன்றுகளை நட்டனர்.
மத்திய அரசின் மனிதவளத் துறையின் "பசுமை பாரதம்' எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் வளமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் மரக் கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் அருகே 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் "ஒருவருக்கு ஒரு மரம்' எனும் அடிப்படையில், இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து, நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகளை நடும் பணியை கடந்த ஜூலை 15-ஆம் தேதி துவங்கினர். இந்த நிலையில் வியாழக்கிழமை இப்பணியை நிறைவு செய்தனர். இலக்கின்படி கல்லூரி வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் டி.பழனிசாமி செய்திருந்தார்.
மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவர்களுக்கு கல்லூரியின் தலைவர் வி.சத்தியமூர்த்தி, தாளாளர் மற்றும் செயலாளர் பி.பாலசிவகுமார், கல்லூரியின் பொருளாளர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.