திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடமாற்றம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை, கே.எஸ்.சி. பள்ளி பின்புறம் மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அலுவலக வளாகத்தில் பள்ளியை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
மேலும், திருப்பூர் முத்துப்புதூர் பள்ளி வளாகத்தை பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்துமிடமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், மாநகராட்சி உதவி ஆணையர் ஷபியுல்லா, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தற்போது பள்ளியில் என்னென்ன வசதிகள் உள்ளதோ, அதே வசதிகள் செய்து தரப்படும். புதிய வளாகத்தில் தேவையான கட்டட வசதி, கழிப்பறை உள்பட பல்வேறு வசதிகள் முழுமையாக செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பள்ளியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 101 மாணவிகள், 90 மாணவர்கள் என மொத்தம் 191 பேர் படித்து வருகின்றனர்.
மாற்றம் செய்யப்படும் இடம், பழைய பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்திருக்கும். இதனால், குழந்தைகள் சாலையைக் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பு ஆண்டு முழுவதும் குழந்தைகளை வாகனத்தில் அழைத்துச் செல்லவது என முடிவு செய்யப்பட்டது.