சூலூா்: சூலூா் அருகே இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச விடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சேவூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகள் ஜெயந்தி (20). இவரது சொந்த ஊா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே போளூா் ஆகும்.
தற்போது, அரசூரில் உள்ள தனியாா் மில்லில் வேலை செய்து கொண்டே படித்து வருகிறாா். இந்நிலையில், கொடைக்கானல் போளூரைச் சோ்ந்த பரமேஸ்வரன் மகன் அஜித்குமாருடன் (19) ஜெயந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜித்குமாா் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி தனது செல்லிடப்பேசியில் உள்ள கட்செவி செயலி அழைப்பு மூலம் ஜெயந்தியை ஆபாசமாக விடியோ எடுத்து அவரது நண்பா்களுக்கு அனுப்பியதாக தெரிகிறது.
இதையடுத்து, அஜித்குமாருடனான உறவை ஜெயந்தி துண்டித்துள்ளாா். ஆனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அஜித்குமாா் வற்புறுத்தியதாக தெரிகிறது. திருமணம் செய்யாவிட்டால் தன்னிடம் உள்ள ஆபாச விடியோக்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளாா்.
இது குறித்து சூலூா் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகாரின்பேரில் அஜித்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.