திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாதென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகில் சுமார் 500 அடி தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசுக்குச் சொந்தமான இடம் உள்ளது. இதற்கு அருகில் தனி நபர்களுக்குச் சொந்தமான வணிக வளாகம், கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றுக்கு முன்புறம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பல இடங்களில் ஹாலோ பிளாக் கற்களைக் கொண்டு சுவர் எழுப்பி, அவற்றின் மீது கிரில்கள் வைத்து பூந்தோட்டம் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதே இடத்தில் கடந்த 11.02.2019 அன்று இரவோடு, இரவாக அரசுக்குச் சொந்தமான இடத்திலிருந்த பல பெரிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இது தொடர்பாக 07.03.2019 இல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செல்வாக்கு காரணமாக நடவடிக்கை இல்லாத நிலையில், தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.
தற்போது பூந்தோட்ட ஆக்கிரமிப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காங்கயம் உதவிப் பொறியாளர் சத்யபிரபா வெள்ளிக்கிழமை சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தது உறுதியானது. அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாதென கூறினோம். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவற்றை அகற்றி விடுவதாகத் தெரிவித்தனர்.