ஊதியூரில் கோயில் நில ஆக்கிரமிப்புப் பிரச்னையால் நிகழ்ந்த கலவரத்தில் தொடர்புடைய இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் கலவரக்காரர்களைக் கைது செய்ய வேண்டும் என காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் காங்கயம் துணை வட்டாட்சியரிடம் சனிக்கிழமை அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
இந்த முன்னணி அமைப்பினர் கடந்த வியாழக்கிழமை ஊதியூரில் உள்ள உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலில் விளக்கு ஏற்றி வழிபடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து அங்கு திரண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது கலவரம் ஏற்றப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 50 பேர் மீது ஊதியூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டிய கலவரக்காரர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் ச.கருப்பையா, புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பொறுப்பாளர் ப.கண்ணுசாமி, ஆதித் தமிழர் ஜனநாயகப் பேரவையின் நிறுவனத் தலைவர் அ.சு. பவுத்தன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தின் காங்கயம் பகுதி நிர்வாகி வி.என்.சுந்தரம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.