காங்கயம் அருகே மேய்ச்சல் காட்டில் பற்றி எரிந்த நெருப்பு தீயணைப்புத் துறையினரால் அணைக்கப்பட்டது.
காங்கயம் அருகே, பழையகோட்டை சாலையில் சத்திரவலசு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மேய்ச்சல் காடு உள்ளது. கடந்த மாதத்தில் சோளப் பயிர் அறுவடை செய்த பின்னர், வளர்ந்துள்ள புற்களை மாடுகள் மேய்ந்து வருகின்றன. மேலும் தற்போது மழை இல்லாததால் புற்கள் ஆங்காங்கு காய்ந்து, வறண்ட நிலையில் கணப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு இந்தப் புற்களில் புகைந்து, தீப் பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த, பழனிக்குச் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் காங்கயம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவ்வழியாக சென்ற நபர்களில் யாரோ புகைத்து விட்டு, அப்பகுதியில் சிகரெட்டை அணைக்காமல் போட்டுவிட்டு சென்றதால், தீப் பற்றியதாகத் தெரிகிறது. இது குறித்து காங்கயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.