திருப்பூரில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தந்தை படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், போயம்பாளையம் கிழக்கு நஞ்சப்பா நகரில் வசித்து வருபவர் பாபு. கூலித் தொழிலாளி. இவரது மகள் சர்மிஸ்ரீ (15). இவர், அவிநாசி சாலை காந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், சர்மிஸ்ரீ, பள்ளிக்குச் செல்வதற்காக தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலை வந்து கொண்டிருந்தார்.
போயம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, நம்பியூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சர்மிஸ்ரீ, பாபு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.