தைப்பூசத் திருவிழாவையொட்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியர் தேரோட்டம் (மழலையர் தேர்) திங்கள்கிழமை நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியருக்கு அதிகாலை சிறப்பு அபிஷகேம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பிரகார உலா வந்தார். பின்னர் தேருக்கு எழுந்தருளி ரத தரிசனம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேர் மேற்கு, வடக்கு, கிழக்க ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. மழலையர் தேர் எனப்படும் சுப்பிரமணியர் தேரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை பஞ்சமூர்த்திகள்-63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழு அறக்கட்டளையினர், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில்... கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், மனநோய் தீர்க்கும் தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை யொட்டி சண்முகநாதருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருப்பூர், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால், சந்தனக் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து மாசி மகத் தேரோட்டத்தையொட்டி, திருத்தேர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.