பல்லடம், அறிவொளி நகர் பகுதி மக்களூக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பல்லடம், திருப்பூர் பகுதியில் உள்ள பின்னலாடை, விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டி பல ஆண்டுகளாக அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜனின் தீவிர முயற்சியால் பல்லடம் வட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 22 ஏக்கர் மாற்று இடத்தை வழங்கிவிட்டு, கால்நடை பராமரிப்புத் துறை வசமிருந்த அறிவொளி நகர் இடத்தை வருவாய்த் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி இந்த இடம் வீட்டுமனைப் பட்டா இன்றி அறிவொளி நகரில் வசித்து வரும் ஏழை தொழிலாளர்கள் 1500 பேர் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
இதற்கான அரசாணை நகலை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் அறிவொளி நகர் வாழ் மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஏ.பழனிசாமி, கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.சித்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.