முதலிபாளையம் சிட்கோ தொழில்பேட்டை வளாகத்தில் வடமாநிலத் தொழிலாளரைத் தாக்கியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரி வட மாநிலத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர்- ஊத்துக்குளி சாலை, முதலிபாளையம் சிட்கோ தொழில்பேட்டையில் செவ்வாய்க்கிழமை தமிழகத் தொழிலாளர்களுக்கும், வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், வடமாநிலத் தொழிலாளி லட்சுமணனை சிலர் தாக்கியனர். இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தங்களைத் தாக்கியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் வட மாநிலத் தொழிலாளர்கள் புதன்கிழமை காலை ஈடுபட்டனர்.
அங்கு வந்த ஊத்துக்குளி போலீஸார், வட மாநிலத் தொழிலாளர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.