திருப்பூர் மாநகரில் மார்ச் 21 ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த மாநகரக் காவல் துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாநகரில், தமிழ்நாடு மாநகர காவல் சட்டம் பிரிவு 41-இன் படி மார்ச் 21 ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப் 4 ஆம் தேதி நள்ளிரவு வரை 15 நாள்களுக்கு கட்சிப் பொதுக் கூட்டங்கள் நடத்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, திருப்பூர் மாநகர எல்லைக்குள் மாநாடு, பொதுக் கூட்டம், போராட்டம், பேரணி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், தர்னா உள்ளிட்டவற்றை நடத்தக் கூடாது.
காவல் துறையின் முன் அனுமதியின்றி மேற்கண்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது. அதேநேரம் திருமணம், இறுதி ஊர்வலங்களுக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது.
போராட்டங்களுக்கு அனுமதி கோருபவர்கள் 5 நாள்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வழங்குவது குறித்தும், ரத்து செய்வது குறித்தும் பரிசீலித்து முடிவு தெரிவிக்கப்படும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.