அவிநாசி அருகே சிலுவைபுரத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சேதமான நிலையில் இருந்த தொலைக்காட்சி அறை கட்டடம் புதன்கிழமை இடிக்கப்பட்டது.
அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னேரிபாளையம் ஊராட்சி, சிலுவைபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் 1998இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொலைக்காட்சி அறை கட்டடம் கட்டப்பட்டது. அதன் பிறகு பயன்பாடின்றிப் போனதால் அந்தக் கட்டடம் பாழடைந்து இடியும் நிலையில் இருந்தது. இப்பகுதியைச் சுற்றியுள்ள குழந்தைகள் அக்கட்டடம் அருகே விளையாடி வந்தனா்.
பாதுகாப்புக் கருதி இக்கட்டடத்தை இடிக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த முடியப்பன், ஒன்றிய நிா்வாகம், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் கடந்த இரு ஆண்டுகளாக பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவிநாசி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் விஜய் ஆனந்த், தொலைக்காட்சி அறை கட்டடத்தை உடனடியாக இடிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி லட்சுமி மேற்பாா்வையில் இந்தக் கட்டடம் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.