சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்குப் பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடை பெற்றது.
உலக சாம்பியன்ஷிப்-2019 என்ற தலைப்பில் சிலம்பம் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் இக்கல்லூரி முதலாமாண்டு மாணவர் ஆர்.தினேஷ் பங்கேற்று 2 ஆம் இடம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, போட்டிகளை நடத்திய சவோலின் குங்ஃபூ மார்சியல் ஆர்ட்ஸ் அகாதெமியின் சார்பில் பரிசுக் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஆர்.தினேஷுக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் சுமதி கிருஷ்ணபிரசாத் மாணவரைப் பாராட்டி ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். கல்லூரி ஆலோசகர் ஜெ.மஞ்சுளா, முதல்வர் எம்.கண்ணன், பேராசிரியர்கள் ஆகியோர் மாணவர் தினேஷை வாழ்த்தினர்.