திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே பாலத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் பாஜக நிர்வாகி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
குண்டடம் அருகே உள்ள சேடபாளையத்தில் வசித்து வந்தவர் பி.சதீஷ்குமார்(28). இவர் குண்டடம் நகர பாஜக இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது நண்பர் மணீஷ்குமாருடன் (25) இரு சக்கர வாகனத்தில் குண்டடம்-ஊதியூர் சாலையில் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
நவக்கொம்பு பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் மேல் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மணீஷ்குமார் லேசான காயமடைந்தனர்.
பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.