வெள்ளக்கோவில், ஓலப்பாளையத்தில் மர்ம நபர்களால் அரசு கேபிள் இணைப்பு ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளது.
ஓலப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (55) அரசு கேபிள் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த 550 வீடுகள், கடைகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார். எல்லக்காட்டுவலசு, பச்சாபாளையம், கண்ணபுரம், முருக்கன்காட்டுவலசு, ஓலப்பாளையம் கடைவீதிப் பகுதிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மர்ம நபர்கள் அரசு கேபிள் ஒயர்களை ஞாயிற்றுக்கிழமை அறுத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், தொலைக்காட்சி ஒளிபரப்புத் தடைப்பட்டது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர். கேபிள் இணைப்பைச் சேதப்படுத்தும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.