பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் எளிதில் செல்வதற்கு வசதியாக கூடுதல் நுழைவாயில் அமைக்கப்பட்டு வருகிறது.
பல்லடம், பொங்கலூர், சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, ஜல்லிபட்டி, செஞ்சேரிப்புத்தூர், 63 வேலம்பாளையம், அருள்புரம், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.150க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரை, திருச்சி, பொள்ளாச்சி, உடுமலை, கோவை, திருப்பூர், கொச்சி போன்ற முக்கிய ஊர்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியில் பல்லடம் நகரம் அமைந்திருப்பதால் இம்மருத்துவமனையை தரம் உயர்த்திட வேண்டும். விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவை அமைக்க வேண்டும்.
மருத்துவமனை நுழைவாயில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்து இருப்பதால் அதிகபடியான வாகன போக்குவரத்தால் சாலையைக் கடக்க முடியாமல் அவதிப்படும் பொதுமக்கள், நோயாளிகள் சிமரத்தைப்போக்க கூடுதல் நுழைவாயில் ஏற்படுத்த வேண்டும் என்று நோயாளிகள் நலச் சங்கம் சார்பில் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜனிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகால கோரிக்கையை பொது சுகாதாரம், மருத்துவப் பணிகள் துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எம்.எல்.ஏ. கொண்டுசென்று கூடுதல் நுழைவாயில் அமைக்க அனுமதியை பெற்றுதந்தார். இதையடுத்து, மாணிக்காபுரம் சாலையையொட்டி இம்மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் புதிதாக நுழைவாயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நுழைவாயில் மூலமாக மருத்துவமனைக்கு பொதுமக்கள், நோயாளிகள், முதியோர் எளிதாக சாலையைக் கடந்து செல்ல முடியும். இக்கோரிக்கையை நிறைவேற்றி தந்த சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்கத்தினர், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.