திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளரிடம் ரூ. 60 லட்சம் மோசடி செய்ததாக வர்த்தகர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், குப்புசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). இவர் திருப்பூரில் சொந்தமாக பின்னலாடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்துவருகிறார். இவரிடம் முத்தணம்பாளையத்தைச் சேர்ந்த ஜுபின் ஜோசப் (34) மொத்தமாக பின்னலாடைகளை வாங்கி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்துவந்தார். இந்நிலையில், ஜுபின் ஜோசப் 60 லட்சம் ரூபாயை கார்த்திக்குத் தராமல் நிலுவைவைத்துள்ளார். கடந்த 8 மாதங்களாக கார்த்திக் நிலுவைப் பணத்தைக் கேட்டும் ஜுபின் ஜோசப் கொடுக்கவில்லையாம்.
இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு ஜுபின் ஜோசப் தான்கொடுக்க வேண்டிய பணத்துக்குப் பதிலாக வீட்டுப் பத்திரத்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். கார்த்திக் சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று வீட்டுப் பத்திரத்தின் ஆவணங்களை சரிபார்த்துள்ளார். அப்போது, வீடு வேறு ஒருவருக்கு விற்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின்பேரில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து ஜுபின் ஜோசப்பை கைது செய்தனர்.