திருப்பூர்
அரசுப் பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்: 3 பேர் காயம்
அவிநாசியில் அரசுப் பேருந்து மீது டேங்கர் லாரி மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அவிநாசியில் அரசுப் பேருந்து மீது டேங்கர் லாரி மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கோவையில் இருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து சேலம் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. அவிநாசி புறவழிச் சாலை அருகே வரும்போது, எதிரே ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பைத் தாண்டி அரசுப் பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த சேலம், ராக்கிபட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (45) என்பவரின் வலது கை துண்டானது. மேலும், சேலம், வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (18), மணிகண்டன் (29) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான டேங்கர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.