திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடிகளை இறுதி செய்வது தொடா்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில், வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், வாக்குச் சாவடிகளை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் மற்றும் 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளைப் பிரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் கால அட்டவணை நிா்ணயம் செய்துள்ளது.
இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், திருப்பூா் தெற்கு, பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள 2 வாக்குச் சாவடிகளைப் பிரித்து புதிதாக வாக்குச் சாவடிகள் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாராபுரம் மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியும், திருப்பூா் தெற்கு தொகுதியில் 7 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 9 வாக்குச் சாவடிகள் வேறு கட்டடத்துக்கு மாற்ற பரிசீலிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல் ஹமீது, திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் செண்பகவள்ளி, தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ், அரசு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.