தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியாதவது:
மக்களவையில் வாதங்கள் செய்பவர் ஆ.ராசா. எதிர்காலத்தின் ஆபத்தை முறியடிக்கும் நீதிபதிகளாக வாக்காளர் உள்ளனர். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
மதிப்பெண்கள் இருந்தும் மருத்துவக் கல்வி பயில முடியாமல் அனிதா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதற்கு காரணம் நீட் தேர்வுதான். அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரப்படும் என்ற திமுகவின் பிரதிபலிப்பை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கியது பாஜக அரசுதான். இவ்வாறு அனுமதி வழங்கி தமிழகத்தை பட்டினிப் பிரதேசமாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. மேலும், கொங்கு நாட்டில் உயர்மின் கோபுரம், கெயில் குழாய், பூமிக்கு அடியில் பெட்ரோலியக் குழாய் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு செயல்பட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்த அவர் பேசியது:
தமிழகத்தில் தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து ஆயிரக் கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். தவிர, லட்சக் கணக்கான பட்டதாரிகள் வேலையின்றித் தவிக்கின்றனர்.
மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும். பெருநிறுவனங்களின் நலனுக்காகவே மத்தியில் ஆட்சி நடத்துகிறார் மோடி.
தமிழகத்தில் கஜா புயலில் பலியான 89 பேரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற பிரதமர் வரவில்லை என்றார்.