மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒழியும் என்று திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார்.
பல்லடம் அறிவொளி நகரில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பிலான அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக திங்கள்கிழமை வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதா விட்டுச் சென்ற நலத்திட்டங்களை, மேலும் மெருகூட்டி அதனை செயல்படுத்தி நல்லாட்சி செய்து வருகின்றனர்.
அவர்களது சாதனைத் திட்டங்களைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறோம். அறிவொளி நகர் பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 6 மாதத்தில் குடிநீர் கொண்டு வந்து விநியோகம் செய்யப்படும். இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான வீட்டுமனைப் பட்டா தேர்தலுக்கு பின்பு வழங்கப்படும்.
தென்னக நதிகளை இணைக்க முன்னுரிமை அளித்துள்ள மோடி மீண்டும் பிரதமரானல் ரூ.65ஆயிரம் கோடி செலவில் கோதாவரி -காவிரி நதிகளை இணைப்பார். இதன் மூலம் தமிழகத்தில் விவசாயம் பெருகும், தொழில் துறை வளர்ச்சி அடையும், வேலையில்லா திண்டாட்டம் ஒழியும். வறுமை என்னும் பினி அகலும் என்றார்.
இப் பிரசாரத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன், சு.குணசேகரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.பி.பரமசிவம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏ.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.