உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் கீழ் மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு நான்காம் சுற்றுக்கு தண்ணீர் புதன்கிழமை திறந்து விடப்பட்டது.
பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தமுள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர்களுக்கு முறை வைத்து தண்ணீர் விடப்பட்டு வருகிறது.
ஜனவரி 5ஆம் தேதி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் பொள்ளாச்சி வட்டத்தில் 19,781 ஏக்கர், சூலூர் வட்டத்தில் 3,020 ஏக்கர், உடுமலை வட்டத்தில் 13,428 ஏக்கர், மடத்துக்குளம் வட்டத்தில் 6,763 ஏக்கர், தாராபுரம் வட்டத் தில் 18,963 ஏக்கர், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கர், திருப்பூர் வட்டத்தில் 7,266 ஏக்கர், காங்கயம் வட்டத்தில் 7,676 ஏக்கர் என ஆக மொத்தம் 94,362 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு மொத்தம் 5 சுற்றுக்களாக தண்ணீர் வழங்கப்படும் என பொதுப் பணித் துறையினர் அறிவித்திருந்தனர். இப் பகுதிகளுக்கு கடந்த மூன்று மாதத்தில் மூன்று சுற்று தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெங்காயம், நிலைப் பயிர்களுக்கு நான்காம் சுற்று தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு நான்காம் சுற்றுத் தண்ணீர் புதன்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.