திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சாலையில் வெட்டிப் போடப்பட்டிருந்த மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் வீராச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (22). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நாகராஜ் கடந்த சில நாள்களுக்கு முன் சீராம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சாலையில் வெட்டிப் போடப்பட்டிருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த நாகராஜை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நாகராஜ் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.