குடிநீர்க் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் காங்கயம் நகராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
காங்கயம் நகராட்சியில் மாதம் ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த குடிநீர்க் கட்டணத்தை ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை காங்கயம் நகராட்சியில் மனு அளிக்க உள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் காங்கயம் நகரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா செயலாளர் திருவேங்கடசாமி கூறியதாவது:
உயர்த்தப்பட்ட குடிநீர்க் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம். ஒன்றிரண்டு பேர் மனு கொடுத்தால் அது சாதாரண நிகழ்வுதான். காங்கயம் நகராட்சிப் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வந்து தனித் தனியாக மனு கொடுக்க உள்ளோம். ஆகவே, மனு கொடுக்கும் போராட்டம் என அறிவித்துள்ளோம்.