வெள்ளக்கோவில் - முத்தூர் சாலையில் குழாய் உடைந்து 15 நாள்களாக குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்து வருகிறது.
கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் வெள்ளக்கோவில் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வெள்ளக்கோவில் - முத்தூர் சாலை மின்வாரிய அலுவலகம் அருகே கடந்த 15 நாள்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
கனரக வாகனங்கள் சென்றதால் பாரம் தாங்காமல் சாலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்கி நின்று சாக்கடையில் கலந்து வருகிறது.
எனவே, குடிநீர்க் குழாயை உடனடியாக சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.