திருப்பூரில் 19 ஆவது நிட்ஷோ பின்னலாடை இயந்திரக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருப்பூர்- காங்கயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டலில் 19 ஆவது நிட்ஷோ பின்னலாடை இயந்திரக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழாவுக்கு சைமா தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், டீமா சங்கத் தலைவர் முத்துரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கண்காட்சி இயக்குநர்கள் கண்ணன், மகேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். கண்காட்சியை ஏ.இ.பி.சி. துணைத் தலைவர் ஆ.சக்திவேல் தொடங்கி வைத்து பேசியதாவது:
ஆடை உற்பத்திக்கு அவசியமானது இயந்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து சந்தைப்படுத்துகின்றனர். முன்னேரிய நாடுகளைச் சேர்ந்த தொழிலிதிபர்கள் காலத்துக்கு ஏற்ப நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்து உற்பத்தியை அதிகரித்து உலக சந்தையில் குறைவான விலைக்கு கொடுத்து முன்னணியில் உள்ளனர்.
திருப்பூரில் உள்ள பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதிகம் செலவு செய்து வெளிநாடுகளில் நடக்கும் இயந்திரக் கண்காட்சிகளை காண முடியாது.
இதனை நிட்ஷோ கண்காட்சி பூர்த்தி செய்திறது. இந்த இயந்திரக் கண்காட்சியை பின்னலாடை சார்ந்த உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆகியோர் காண வேண்டும். நவீன இயந்திரங்களைக் கொள்முதல் செய்து உற்பத்தியை அதிகரித்து பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.