திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலர்களுக்கு 25 இ-செலான் கருவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி புதன்கிழமை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இ-செலான் கருவியின் மூலமாக வாகன வழக்குகளைப் பதிவு செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தமிழக அரசால் புதியதாக செயல்படுத்தப்பட்ட 25 இ-செலான் கருவிகளை போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி வழங்கினார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த இ-செலான் கருவி மூலமாக வசூலிக்கப்படும் அபராதத் தொகை அரசு கணக்கில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (மாவட்ட தலைமையகம்) ஜெயசந்திரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.