திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 111-ஆவது பிறந்த நாளையொட்டி முரசொலி அறக்கட்டளை, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி இணைந்து நடத்திய இப்போட்டி திருப்பூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் போட்டியை தொடங்கிவைத்தார். இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் அடுத்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதில், திமுக மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், முன்னாள் மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி, வடக்கு மாவட்ட கழக ஒன்றிய, நகர செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், முன்னாள் மாவட்ட கழக இலக்கிய அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.