வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாகமநாய்க்கன்பட்டி ஊராட்சியில் உள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர்கொண்டு வருவதற்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர்வரத்து இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடக்கிறது. அணைக்கு அருகில் அமராவதி ஆற்றில் வரும் உபரிநீரை மின் மோட்டார் வைத்து குழாய் மூலம் நீர் கொண்டுவரும் திட்டத்தை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மற்றொரு திட்டமாக ரூ.255 கோடி மதிப்பீட்டில் அமராவதி ஆற்றிலிருந்து வாய்க்கால் வெட்டி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவற்றில் ஏதாவதொரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற கடந்த 3 ஆண்டுகளாகப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இது குறித்து வட்டமலைக்கரை ஓடை அணை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் கே.பழனிசாமி கூறியதாவது:
மேற்கண்ட தீர்மானத்தை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர் என்றார்.