திருப்பூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அமைதிக்குழு அமைக்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனைத்துக் கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.ரவி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாலர் சிவபாலன் உள்ளிட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமாரிடம் அளித்துள்ள மனு:
கோவை மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அருகில் உள்ள தொழில்நகரமான திருப்பூர் மாவட்டத்திலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், தொழில், வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகளைக் கூட்டி அமைதிக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.