வெள்ளக்கோவிலில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுப்பை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட இணைச் செயலாளர் கே.சரவணன் வரவேற்றார். பாஜக மாவட்ட துணைத் தலைவர் உஷாதேவி குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். வெள்ளக்கோவில் நகரத் தலைவர் பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். அதிமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகரச் செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி, நகராட்சி முன்னாள் தலைவர் வி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் 12 வயதுக்கு உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இங்குள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் குழந்தைகளின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. தர்ம ரக்ஷண சமிதி, பஜ்ரங்தள், சத்சங்க பிரமுக், மட்மந்திர், பூசாரிகள் பேரவையைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளக்கோவில் ஒன்றிய, நகர விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் செய்திருந்தனர்.