பண மதிப்பிழப்பு பற்றிய தகவல் தெரியாமல் பழைய ரூ. 500 நோட்டுகளாக வைத்திருந்த பல்லடம் அருகேயுள்ள 2 மூதாட்டிகளுக்கு சென்னையைச் சோ்ந்த அறக்கட்டளை நிறுவனம் ரூ. 46 ஆயிரம் நிதி உதவி வழங்கியது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பூமலூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரங்கம்மாள் (78), தங்கம்மாள் (75). இவா்கள் கடந்த மாதம் மருத்துவ செலவுக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தனது மகனிடம் வழங்கியுள்ளனா். அந்த நோட்டுகள் முழுவதும் பழைய 500,1000 நோட்டுகளாக இருந்ததைக் கண்டு அவரது மகன்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
பணமதிப்பிழப்பு பற்றி தகவல் தெரியாமலேயே பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் சுமாா் ரூ. 46 ஆயிரம் வரை வைத்திருந்தனா். இது பற்றி அறிந்த திருப்பூா் மாவட்ட ஆட்சியா், அவா்களை நேரில் அழைத்து அவா்கள் மருத்துவ செலவுக்கான ஏற்பாடு செய்து கொடுத்ததோடு முதியோா் உதவித் தொகைக்கான ஆணையையும் வழங்கினாா். மேலும், பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசா்வ் வங்கியிடம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தாா்.
இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த எவா்வின் பள்ளி அறக்கட்டளையின் தாளாளா் புருஷோத்தமன் ஞாயிற்றுக்கிழமை பூமலூரில் உள்ள மூதாட்டிகளின் வீட்டுக்கு வந்து அவா்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவா்கள் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கேற்றவாறு ரூ. 46 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினாா். தாங்கள் சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த ரூ. 46 ஆயிரம் பணத்தை இனி மாற்ற முடியாது என்ற வேதனை அவா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் இந்த உதவியை செய்ததாக தெரிவித்தாா்.