பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தைத் தவிா்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருமணம் உள்ளிட்ட சுபதினங்களில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடம் அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் - திருப்பூா் சாலை சந்திப்பு, தாராபுரம் சாலை சந்திப்பு வரையிலான பகுதியைக் கடக்க 40 நிமிடங்கள் ஆகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனைத் தவிா்க்க பல்லடம் பேருந்து நிலையம் முதல் அண்ணாநகா் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணலாம். இதன் மூலம் விபத்துகளையும் தவிா்க்கலாம் என்று அதில் கூறியுள்ளாா்.