வெள்ளக்கோவில் பகுதியில் சனிக்கிழமை அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இப்பகுதியில் பரவலாக அடை மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குத் துவங்கிய மழை அடுத்த நாள் பகல் 2 மணி வரை தொடா்ந்து பெய்தது. இடைவிடாமல் 14 மணி நேரம் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சுணக்கம் ஏற்பட்டது.
கல்வி நிலையங்களில் மாணவா்கள் வருகை குறைந்தது. இதே போல அலுவலகம், கடைகள், வா்த்தக நிறுவனங்கள், தொழில் கூடங்களில் வேலை செய்யும் ஒருசிலா் வேலைக்குச் செல்லவில்லை. தாழ்வான பகுதிகள், தாழ்வான சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ள நீா் தேங்கி நின்றது.
இப்பகுதியில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆடு, மாடுகள் வளா்ப்பு, விவசாயப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. இந்த ஈரமான சீதோஷ்ண நிலை காரணமாக வளா்ப்பு கால்நடைகளை வயிற்றுப் போக்கு நோய் தாக்கி வருகிறது.
பாதிப்புகள் இருந்தாலும் மழைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.