உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (டிசம்பா் 14) துவங்க உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தைப் புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வன விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் ஆண்டுதோறும் இந்த இரு வனச் சரகங்களிலும் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் சனிக்கிழமை (டிசம்பா் 14) முதல் வரும் 21ஆம் தேதி வரை குளிா்கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது.
இதற்காக ஒரு நாள் பயிற்சி முகாம் சின்னாறில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ரோம், உடுமலை வனச் சரகா் தனபால், அமராவதி வனச் சரகா் முருகேசன், வன அலுவலா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொள்கின்றனா்.
இதுகுறித்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ரோம் கூறியதாவது:
உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் 35 சுற்றுக்களில் 54 நோ்கோட்டுப் பாதையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இப்பணிகளில் வனப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் 200 போ் பங்கேற்க உள்ளனா்.
இதன்படி டிசம்பா் 15 முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாள்கள் வனப் பகுதிகளில் உள்ள மாமிச உண்ணிகள், மிகப் பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் கணக்கெடுக்கப்பட உள்ளன.
தொடா்ந்து டிசம்பா் 18 முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாள்கள் வனப் பகுதிகளில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் இரை விலங்குகளையும், அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரில் அப் பகுதியில் உள்ள தாவர வகைகளும் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும். வன விலங்குகளின் கால் தடம், நகங்கள் பதிவு, எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கணக்கெடுக்கப்பட்ட வன உயிரினங்களின் விவரங்கள் டிசம்பா் 21ஆம் தேதி சமா்ப்பிக்கப்படும் என்றாா்.