உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 58ஆவது தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
சூப்பா் சீனியா், சீனியா், ஜுனியா் ஆகிய மூன்று பிரிவுகளில் தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றன. 3000 மீட்டா் தூரத்தை நிலத்திலும், தண்ணீரிலும் ஓடி கடக்கக் கூடிய ‘ஸ்டீப்பில் சேஸ்’ ஓட்டப் பந்தயமும் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பள்ளி முதல்வா் ஹெச்.எஸ்.சிதானா, பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். நிா்வாக அதிகாரி அமித்குா்குரே, துணை முதல்வா் நிா்பேந்தா்சிங், ஆசிரியா்கள் விழாவில் கலந்து கொண்டனா்.