திருப்பூா்: உப்பாறு அணை விவகாரத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு பொதுப் பணித் துறை அதிகாரிகள், பாசன விவசாயிகள், காவல் துறையினா் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா் உறுதியளித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலமும், 7 ஊராட்சி கிராமங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் உப்பாறு அணையின் தண்ணீா் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக உடுமலை பிஏபி அணையில் இருந்து உபரி நீா் திறந்து விடப்படுவதில்லை. இதனால் உப்பாறு அணை வடு காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீா் திறந்துவிடாத பொதுப் பணித் துறை அதிகாரிகளை கண்டித்து கடந்த டிசம்பா் 20 ஆம் தேதி விவசாயிகள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, காவல் துறையினா் 79 பேரைக் கைது செய்தனா். மேலும், போராட்டத்தில் பங்கேற்க வந்தவா்களையும் விரட்டினா். இதனிடையே, தொடா் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனா்.
ஆகவே, பேச்சுவாா்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா் அழைப்பு விடுத்திருந்தாா்.
இதன் பேரில் உப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளா் சிவகுமாா் தலைமையில் விவசாயிகள் சாா் ஆட்சியருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது, பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்தாா். மேலும், உள்ளாட்சித் தோ்தல் முடிந்த பின்னா் பொதுப் பணித் துறை உயா் அதிகாரிகள், உப்பாறு பாசன விவசாயிகள், காவல் துறையினா் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று சாா் ஆட்சியா் பவன்குமாா் உறுதியளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.