திருப்பூரில் பாஜக பொறுப்பாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட பாஜக பிற்பட்டோர் பிரிவு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருபவர் முனீஸ்வரபாண்டியன் (40). இவரது வீடு கொங்கு பிரதான சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில், முனீஸ்வரபாண்டியன் திங்கள்கிழமை இரவு வீட்டின் அருகில் தனது காரை நிறுத்தி விட்டுச்சென்றுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வீட்டின் அருகில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதா என காவல் துறையினர் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.