திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கோயில் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் கொடியை பஞ்ச வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்து கொடிக் கம்பத்தில் ஏற்றிவைத்தனர். பிறகு உற்சவ மூர்த்திகள் பிரகார உலா, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. பிப்ரவரி 14ஆம் தேதி மாலை சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 15ஆம் தேதி பூத வாகனக் காட்சிகள், சிம்ம வாகனக் காட்சிகள், 16ஆம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகள், 17ஆம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனக்காட்சிகள்,18ஆம் தேதி யானை வாகன, அன்ன வாகன காட்சிகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து 19ஆம் தேதி அதிகாலை விநாயகர், திருமுருகநாதர், வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தோராட்டம் நடைபெறுகிறது. 20ஆம் தேதி மாலை 3 மணிக்கு மீண்டும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனம், சிம்ம வாகனக்காட்சிகளும், தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 22ஆம் தேதி இரவு 7-மணிக்கு ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 23 ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 24ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக் காட்சி ஆகியவற்றுடன் தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.